×

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சமரசம் நிராகரிப்பு: போராட்டம் தொடரும்; விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறிய சமரசத்தை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். டிசம்பர் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும், டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் ஒவ்வொன்றாக முடக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பந்த் போராட்டம் நடந்த நிலையில், இரவு 8 மணிக்கு விவசாய சங்கங்களின் 13 பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். 3 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களில் விவசாயிகள் பாதகமாக கருதும் அனைத்து திருத்தங்களையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித்ஷா கூறினார். ஆனால், 3 சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் கடும் உறுதிபாடுடன் உள்ளனர். எனவே, எந்த திருத்தத்திற்கும் சம்மதிக்க முடியாது என கூறினர். இதனால், அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதோடு, மத்திய அரசு ஒவ்வொரு முறையும் சட்ட திருத்தத்ததை பற்றி மட்டுமே பேசி வருவதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், மத்திய வேளாண் அமைச்சருடன் இன்று நடப்பதாக இருந்த 6ம் சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர்.

இது மத்திய அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்டத்தில் பாதகமாக விவசாயிகள் கருதும் அனைத்தையும் நிவர்த்தி செய்து, அதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வர தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ முன்மொழிவு விவசாயிகளிடம் நேற்று தரப்பட்டது. இது குறித்து ஆலோசித்த போராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசின் இந்த சமரச திட்டத்தை நிராகரித்தனர். மேலும், தங்கள் போராட்டத்தை செயலிழக்க செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக கண்டனம் தெரிவித்து, போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக அறிவித்தனர். இது குறித்து விவசாயிகளின் தலைவர் சிவ் குமார் காக்க செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசின் இன்றைய பரிந்துரையை முழுமையாக நிராகரிக்கிறோம். இனி எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 12ம் தேதியோ அதற்கு முன்பாகவோ ஜெய்ப்பூர்-டெல்லி மற்றும் டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலைகளை முடக்குவோம். டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் படிப்படியாக முடக்குவோம்’,’ என்றார்.

மற்றொரு விவசாய சங்க பிரதிநிதிகள் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், ‘‘அமித்ஷா ஆலோசனையில் கூறிய விஷயங்களையே இன்று எழுத்துப்பூர்வமாக தந்துள்ளனர். சட்ட திருத்தம் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டோம். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். அதை தவிர்த்து வேறெந்த ஆலோசனையும் இல்லை. இனி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. வரும் 14ம் தேதி அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் போராட்டம் நடைபெறும். தேசிய அளவிலான இப்போராட்டத்தை தொடர்ந்து டெல்லிக்கு செல்லும் சாலைகள் முடக்கப்படும்,’’ என்றார். மேலும், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டிக்கும் வகையில், அதானி, அம்பானி நிறுவன பொருட்களை புறக்கணிக்கப் போவதாகவும், இனிவரும் நாட்களில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தப் போவதில்லை எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இறுதிகட்டத்தில் பேச்சுவார்த்தை
இனி மத்திய அரசுடன் பேசப்போவதில்லை என விவசாய பிரதிநிதிகள் அறிவித்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேம். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்னும், பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை தொடர்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏதோ வர்ணனை போல ரன்னிங் கமென்ட்ரியாக கூற முடியாது. இப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாக நம்புகிறோம்,’’ என்றார்.

மத்திய அரசு கூறிய சமரச திட்டம் சட்ட திருத்தம் செய்வது தொடர்பாக விவசாயிகளிடம் மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகள்:
* குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்பது எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்படும்.
* மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்வதற்கான தனியார் வணிகர்களை பதிவு செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலம், வேளாண் விளைபொருள் சந்தைக்குழு சட்டத்தின்படி, அவர்களிடமும் மாநில அரசுகள் செஸ் வரி அல்லது கட்டணங்களை விதிக்க முடியும்.
* பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள சிவில் நீதிமன்றங்களை விவசாயிகள் நாடலாம்.
* ஒப்பந்த நிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த கட்டுமானத்திற்கும் கடன் வழங்கப்படாது. ஒப்பந்தம் முடிந்த பிறகு அங்கு கட்டப்பட்ட கட்டுமானத்தை ஒப்பந்ததாரர் உரிமை கோர முடியாது.
* விவசாயிகளின் நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ தடை விதிக்கப்படும். நிலத்திற்கு ஒப்பந்ததாரர் உரிமை கோர முடியாது, அங்கு மாற்றங்கள் செய்யும் தடை விதிக்கப்படும்.



Tags : government , Federal government rejects compromise to amend agricultural laws: struggle to continue; Farmers notice
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை